குளியலறை

குளிக்கச் சென்ற நான்
இருண்ட என் குளியலறையில்
வண்ண எண்ணங்களில் மூழ்கி
அந்த இருட்டில் தனிமையில்
என்னை என்னிடம் மறைக்காத இருளின் வெளிச்சத்தில்
சூரியக்குளியல் போட்டுக்கொண்டிருந்தேன்.

ஒரு குரல்
குளிக்க எவ்வளவு நேரமா ?
என்றாள் என் மனைவி

கதவைத் திறந்து வெளியே வந்துவிட்டேன்

என் மனைவி என்னை பார்த்து முறைத்த போது தான் புரிந்தது இந்த வெற்றுடல் நனையவில்லை என்று...

__________________________________________________________________

குற்றப் பட்டியல்

என் குற்றங்கள் பட்டியலிடப்பட்டன
என் மனைவியால்...

நான் நிரபராதி என்ற வாதத்தில்
சாட்சிகள் மொழியப்பட்டன என் சார்பில்

இறுதியில் ஆணாதிக்க சட்டத்தின் கீழ் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிரபராதிக்கு...

__________________________________________________________________

கற்பனை கிலோ 10 ரூபாய்

என் சிறு சிறு எண்ணச் 
சிதறல்களை
சிறுக சிறுக சேர்த்து
காகிதத்தில் பதித்து
வைத்தேன்

அது விலை கொடுத்து 
வாங்கப் பட்டது.
பழைய பேப்பர் காரனால்  
கிலோ 10 ரூபாய்க்கு...


__________________________________________________________________

உலகிற்கு அப்பால் ஒரு வண்ணத்துப்பூச்சி


அந்த வார்த்தையை கேட்டவுடன் அந்த வார்த்தை பிறந்த இடத்தில் கொண்டு  விழுந்தேன்.
விழுந்த இடத்தில் நதி ஓடியதால் நதியால் அடித்து செல்லப்பட்டு நதி வீழும் இடத்தில் தூக்கி எரியப்பட்டு மரத்தின்  இலையின் நடுவே மாட்டிக் கொண்டேன்.

விழுந்த இலையின் அருகே பச்சை புழுக்கள் உறங்குவதைக் கண்டு நானும் உறங்கினேன்.

நான் உறங்கிய இலை என்னை மூடி சுருங்கி காய்ந்து சில நாட்களில் உதிர்ந்தது.

உதிர்ந்த இலையில் நான் பட்டாம்பூச்சியாய் மாறி இருந்தேன்.

பட்டாம்பூச்சி ஆகிய நான் வானை நோக்கி சிறகை விரித்து
சிறகடித்துப் பறந்து மென்மையிலும் மெல்லிய பூவில் போய் உட்கார 

என்னைப் பிடித்து உலுக்கி
"நான் இவ்வளவு பேசுகிறேன் கல்லு போல் நிற்கிறீர்கள் " என்றாள் என் மனைவி...